Tuesday 2 June 2015

திகைக்க வைக்கும் துபாய் -Stunning Dubai

துபாயை அறியாதோர் யாரும் இல்லை. இருப்பினும் நம் மக்களுக்கு வேலை தருவதில் முக்கிய அங்கம் வகிக்கும் நகரங்களில் துபாய் இருக்கும் பொழுது அது நம் நினைவில் வந்துக் கொண்டே இருக்கின்றது , ஏதோ ஒரு வகையில் நம் குடும்பத்தில் உள்ளோர் ஒருவர் அங்கு சென்று வேலை செய்து வருவதனை நாம் அறிவோம்,
எங்கள் குடும்பத்திலும் அதிகம் நபர் துபாயில் அதிகம் உள்ளனர்.

துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெரிய நகரமாகும். அங்கு போதிய அளவு எண்ணெய் வளம் இல்லாததால் துபாய் தன கவனத்தினை வேறு ஒரு வகையை தேடிக் கொண்டு அதில் வெற்றியும் பெற்ற நகரமாக விளங்குகின்றது . ஹாங்காங் போன்று தன்னை ஒரு உலக சந்தை கூடமாக தன்னை உருவாக்கிக் கொண்டது . ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இது மிகவும் பிரசித்திப் பெற்றது. இது ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் இஸ்லாமியர் மட்டுமில்லாமல் அனைத்து மார்க்கத்தினை சார்ந்த மக்களும் இங்கு வாழ்கின்றனர்.(இஸ்லாமிய நாடாக இருந்தாலும் அனைத்து கேளிக்கைகளுக்கும் அது இடமாகவும் உள்ளது)
இஸ்லாமியர், கிருத்துவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். அனைத்து மத மக்களும் இங்கே நல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர்.ஆனால் அரபியர்களைத் தவிர மற்றவர்களுக்கு அது குடிஉரிமை கொடுப்பதில்லை.வெளிநாட்டு முதலீடு பெருக சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்துள்ளது . துபாயைச் சார்ந்த அரபியர்களைக் காட்டிலும் மற்ற மக்களே மிகைத்து அங்கு உள்ளனர்.

அங்கு நம் பக்க மக்கள் தங்களுக்கென்று ஒரு அமைப்பு அமைத்துக்கொண்டு தமிழை வளர்க்கவும் மற்றும் நம் மக்களுக்கு உதவி செய்யும் குறிக்கோளோடு செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது .
தமிழ் மக்களை விட அதிகமாக கேரள மக்கள் மிகவும் சிறந்த வேலையில் இருப்பதுடம் அவர்களுக்குள் தங்கள் உதவியை செய்து வருகின்றனர்.

'நாம் துபாய் வரலாமா? வந்தால் வேலை கிடைக்குமா?' என்று கேட்டால் 'இப்பொழுது வேலை கிடைப்பது மிகவும் சிரமம்' என்றே சொல்வார்கள் . ஆனால் இன்னும் மக்கள் போய்க் கொண்டுதான் இருக்கின்றார்கள் .அவர்களுக்கும் அங்கு வேலை கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றது .
வேலையுடன் தங்கும் இடம் கொடுத்தால் சேமிப்பு கூடும் . வாடகைகள் மிகவும் அதிகம்.அங்கு சம்பளத்தை கொடுத்து அங்கேயே செலவு செய்யும் நிலையும் அதிகம். கொடுப்பதுபோல் கொடுத்து அங்கேயே செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படலாம். அவசரப்பட்டு வேலைக்கு சேராமல் எப்படிப்பட்ட வேலை என முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். வேலையை வாங்கிக் கொண்டு சம்பளம் சரியாக கொடுக்காதவர்களும் அங்கும் உள்ளனர்.
ஆனால் நாம் ஒரு பிரயாண விசா எடுத்துக் கொண்டு போய் அங்கு வேலை தேடிக் கொள்வதுதான் உத்தமம் .

No comments:

Post a Comment