Saturday 23 March 2013

ஒலையாக உன்னிடம் தந்துவிட்டேன்!

அண்ணனும் நீயே ஆசிரியரும் நீயே
அண்ணனாக வழிகாட்டினாய்
ஆசிரியராக கற்பித்துக் கொடுத்தாய்
தவறு  செய்தால் தண்டித்தாய்
பிழை இருந்தால் திருத்தினாய்
அன்பை வளர்த்தாய்
ஆர்வத்தை தூண்டினாய்
நண்பனாக நான்கு இடமும் காட்டினாய்
முதல்வனாக இருந்து குடும்ப பாரத்தை சுமந்தாய்
இளவலான என்னை ஏவி துணையாக இருக்கச் சொன்னாய்
ஏவியதை இயன்றவரை செய்துத் தந்தேன்

எனக்கொரு இல்லாளை இருவரும் தேடித் தந்தீர்
எனக்கென்று வந்தவள் என் நெஞ்சோடு கலந்தவளை
உனக்கென்று உடையவளுக்கு அது உகந்ததாகவில்லை
நீங்கள் பார்த்து எனக்கு முடித்து வைத்தவள்
நீ முடித்தவளுக்கு  பிடிக்காமல் போனது
நான் முடித்தவள் செய்த குற்றம் என் குற்றமாகாது
குற்றத்திற்கு ஒரு குற்றம் பெருக வேண்டாம்


உன் முகம் காட்டி உன்னை நேசிக்க வைத்தாய்
என் முகம் காட்டி உன்னை பாதிக்க விரும்பவில்லை
நான் நினைத்ததை உன்னிடம் நேரில் சொல்ல அச்சம்
ஒலையாக உன்னிடம் தந்துவிட்டேன்
ஒளியாக உன் பார்வையை  செலுத்து
பிடித்திருந்தால் உயர்வாக ஓர் வழி காண்பித்து விடு
பிடித்தது பாதியாகிப் போனால் திருத்தி விடு
பிடிக்காமல் போனால் தர விரும்பியதை  தந்து விடு
பொருட்கள் பொல்லா சோதனை
பொருட்களால் பாசத்திற்கு சோதனை வேண்டாம்

எல்லா வகையிலும்  என் மனதில் ஏற்றம் பெற்றாய்
வேண்டா  வகையில்  நம் மனதில் பொல்லாப்பு வேண்டாம்
இருந்தவருக்கும் வந்தவருக்கும் வேண்டாத பகை வேண்டாம்
ஒற்றுமையாய் இருந்தோம் ஒற்றுமையாய் பிரிவோம்
ஒற்றுமையாய் இருந்து பிரிந்து வாழ்வோம்

(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.( குர்ஆன்-4:35.)

No comments:

Post a Comment