Sunday 28 April 2013

ஒவ்வொருவரும் பொறுப்பாளியே.

  தலைமைப் பொறுப்பினை தேடி அலையக் கூடாது அது நமது ஆற்றலைக் கண்டு மற்றவர்கள் நமக்குத் தரப்பட்டதாக இருத்தல் சிறந்தது. பொறுப்பு கிடைத்த பின்பு ஆதிக்க மனப்பான்மை இல்லாமல் சேவை உணர்வே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும். தமக்கு கொடுக்கப்படும் தலைமைப் பொறுப்பினை 'வேண்டாம்.' என தட்டிக் கழிக்கக் கூடாது. அது இறைவனால் கொடுக்கப் பட்ட மக்களுக்கு சேவை செய்யும் அருள். இத்தகைய அறிய வாய்ப்பினை  இறைவன் அனைவருக்கும் கொடுப்பதில்லை. தலைமைப் பொறுப்பினை ஏற்ற பின்பு அதன் சேவையை செய்ய முடியாத நிலை ஏற்படும்போது அதனை விட்டு விலகி விடுதல் உயர்ந்த செயல்.

 தலைவராக தேர்ந்தெடுப்பவரை நல்லவராகவும் ,சிந்தனைத் திறன் மிக்கவராகவும்,இறை நம்பிக்கை உள்ளவராகவும்,செயல்பாட்டுத் திறமை மிக்கவராகவும் உள்ளவராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
 “மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்” (புகாரி முஸ்லிம்) என்பது  நபி மொழி.

 சேவை மனப்பான்மை – “சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்” நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.
“அணுவளவு கர்வம் உள்ளவர் சுவனத்தில் நுழைய மாட்டார்”. (முஸ்லிம்)

 தேர்ந்தெடுத்த பின் நற்காரியங்களை நிறைவேற்றுவதில் நாம்  அவருக்கு துணை நின்று  உற்சாகம் கொடுத்து உதவி செய்ய வேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர்சொல்வதைக் கேட்டு நடங்கள்."


 அனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல் இருப்பது இயல்பு. ஆனால் அதற்கு யார் தகுதியானவர் என்பது பற்றி   மக்களுக்கு சிந்தனை இருந்தாலும் சரியான தலைமையை தேர்ந்தெடுப்பதில் நாட்டம் வருவதில்லை. தற்காலத்  தலைவர்  பொறுப்பில் இருக்கும் பலர்  சுயநலப் போக்கினை தன்  கையில் எடுத்துக் கொள்வதால் தலைவரை தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு ஆர்வமில்லை, ஆனால் தலை இல்லாத உடம்பில்லை, வழி நடத்துவதற்கு ஒரு தலைமை அவசியம் தேவைப்படுகின்றது. தலைமை ஏற்று வழி நடத்துபவர் ஒருவர் இல்லையென்றால் குழப்பமே வந்து சேரும் . "உங்களில் இருவர் இருந்தாலும் அவர்களில் ஒருவரை உங்களுக்கு தலைமையாகிக் கொள்ள வேண்டும். மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்” (புகாரி, முஸ்லிம்)

ஒவ்வொருவரும் பொறுப்பாளியே.
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்,"நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண்/ தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன்/ தன் பொறுப்புகளுக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண்/ தன் கணவனின் வீட்டாருக்கும்/ அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள. அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகட்குபட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரீ - ஹதீஸ் எண் : 713

No comments:

Post a Comment