Sunday 14 April 2013

நாட்டைப் பற்றியது அதனால் நீங்கள் நாடவேண்டும்

குழந்தைகளுக்கு கதை கேட்பது பிடிக்கும்
குழந்தையான முதியோருக்கு கதை சொல்ல பிடிக்கும்

பொழுதை ஓட்டுபவர்களுக்கு கதையளக்க பிடிக்கும்
தேர்தலில் ஒட்டு கேட்பவருக்கு கதையடிக்கப் பிடிக்கும்

நடந்ததை கதையாக சொல்பவர்கள் வெளிநாடு சென்று வந்தவர்கள்
நாங்கள் வந்தால் நல்லது நடக்குமென்று கதை விடுவார்கள் அரசியல் வியாபாரிகள்

இத்தனை கதையை கேட்டு அலுத்துப் போனவர்களுக்கு
இரத்தினக் கதையை சொல்வேன் கேட்டு விட்டுப் போங்கள்
------------------------------------------------------------------
கதை நாட்டைப் பற்றியது அதனால் நீங்கள் நாடவேண்டும்
-------------------------------------------------

ஒரு வருடத்திற்கு ஒரு மன்னன் ஆட்சி செய்ய பின்பு தனித் தீவில் விடப்படுவார்
அடுத்த வருடம் புதிய மன்னர் வந்து ஆட்சி நடத்துவார்
ஆண்ட மன்னனுக்கு ஒரு வருடம் முடிய கப்பலில் ஏற்றிக் கொண்டு அந்த தீவில் விடப் பட்டு வரும்  பொழுது ஒரு படகு கவிழ்ந்து ஒருவர் மட்டும் ஒரு கட்டையில் மிதந்து உயிருக்கு போராடிக்  கொண்டிருபதனை பார்த்து ஆட்சி செய்ய ஒரு மன்னர் தேவையானதால் அவரை காப்பாற்றி அடுத்த மன்னராக பட்டம் சூட்டினர் .காப்பற்றப் பட்டவர் நான் அதற்க்கு தகுதி அற்றவன் என்று எவ்வளவோ மறுத்தும் அவர்கள் ஏற்கவில்லை .

மூன்று  மாதம் ஆட்சியின்  அனுபவம் பெற்ற பின் இதற்கு முன் ஆட்சி செய்து விடப்பட்ட மன்னர்கள் உள்ள தீவை பார்க்க சிலரை அழைத்துச் சென்றார் . அங்கு ஒரே காடாகவும் கொடிய காட்டு  மிருகங்களும் மிகைந்திருப்பதுடன் விடப்பட்டு வந்த மன்னர்கள் மிருகங்களால் கொல்லப்பட்டு கிடப்பதனை பார்த்தார் . நமக்கும் ஒரு வருடம் முடிய இந்நிலை வரும் என்பதனை அறிந்துக் கொண்டார். நாடு திரும்பினார்.  ஒரு வருடம்  முடிவதற்குள் அனைத்துக் காட்டு மரங்களையும் அழித்து பிணங்களை அகற்றி சோலையாக்கி அத்துடன் தேவையான செல்வங்களை அங்கு கொண்டு சேர்த்தார்

 ஒரு வருடம் முடிந்து அவரை அந்த தீவுக்கு அழைத்துச் செல்லு முன் யானை மீது அமர வைத்து நகர்வலம் நடத்தினர் . அவர் மகிழ்வாக சிரித்துக் கொண்டிருப்பதனை பார்த்த மக்கள் அதிசயித்தனர் .உயிரை விடப் போகும் இவர் மகிழ்வாக இருப்பது எப்படி என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. அதனை அவரிடம் கேட்டும் விட்டனர் .

அந்த ஓர் ஆண்டு முடிந்த மன்னர் சொன்னார் ' உலகில் குழந்தை பிறக்கும் போது அழும் ஆனால் மற்றவர்கள் மகிழ்ச்சியோடு சிரிப்பார்கள் . இதுதான் உலகம் . இறக்கும்போது நன்மை செய்தவன் நல்லவன் சிரித்துக் கொண்டே உயிர் விடுவான் ஆனால் அவன் இறப்பதைக் கண்ட மக்கள் அழுவார்கள் . நான்  நல்ல உயர்தரமான ராஜ வாழ்வு வாழ்ந்ததோடு எதிர் காலத்தையும் சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கு வேண்டியதனை செய்துவிட்டேன் .அந்த கொடுமையான தீவை பார்த்துவந்த பின் அமைதியாக அடுத்த வாழ்வுக்கு தேவையான ஆயதங்களை  செய்துவிட்டேன் .நான் போகப் போகுமிடம் உயர்ந்த இடம் அங்கு நான் நிம்மதியாக அமைதியாக வாழ்வேன் என்றார்

இதத  கதை நமக்குச் சொல்லும் பாடம்   இந்த உலகில் நாம் நிலையற்ற வாழ்வு வாழ்கிறோம். .நிலையாக வாழப்  போகும் இடத்திற்கு(சுவனத்திற்கு) நாம்  தயார் படுத்திக் கொள்ள வேண்டும் ,அது அரசர் முதல் சாதாரண மக்களும் தேட வேண்டியது.

2 comments:

  1. நல்லதொரு கதை... முடிவில் நல்லதொரு முத்தாய்ப்பு... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. முத்தான கருத்துகளை ஊன்றுகோலாக தந்து இந்த முதியோனை நிமிர்ந்த நடை போட உற்சாகம் தந்தமைக்கு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு திண்டுக்கல் ஹல்வா தர விருப்பம். எனக்கு திண்டுக்கல் ஹல்வா மீது அவ்வளவு ஆசை

      Delete