ஆண் துணையின்றி பெண்ணால் வாழ முடியும் .பெண் துணையின்றி ஆணால் வாழ்வது கடினம். இதனை முதுமை அடைந்த பின் முழுமையாக அறியலாம்.
நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த அருள் என்பது உண்மையாக இருந்தாலும் கணவனாகி காலத்தோடு அவளோடு ஒன்றி இணைந்த நாம் அவளது மனதை அறிந்து செயல்பட்டோமா ! என்பது அறிந்துக் கொள்ள முடியாத ஒன்றுதான் . முதுமை வந்தபோதுதான் அவள் நமக்காகவும் குடும்பத்திற்காகவும் ஆற்றிய சேவையை அறிய முடிகின்றது . அறிந்தபோது அதனை அவளிடம் சொல்லி மன வேதனையை வெளியிட்டால் 'அதனை இப்பொழுது நினைத்து ஆவப் போவது என்ன! நம் குழந்தைகள் நல வாழ்வு பெற்றால் போதும் அதற்கு இறைவனை வேண்டுவோம்' என்ற ஆறுதல் பதில்தான் வரும்.
முதுமையின் காரணமாக உடல் நலம் குன்றியது .அதனால் உள்ளம் சோர்வு அடைய சோபாவில் ஓய்வாக அமர்திருந்தேன் .பல கற்பனைகள், கடந்த கால நினைவுகள், தனியாக விடப்பட்டு விட்டேனோ. முதுமை என்னை மற்றவருக்கு சுமையாக்கி விடுமோ ! நாம் மற்றவருக்கு சுமைதாங்கியாக வாழ்ந்தோமே ...இப்படி பல எண்ணங்கள் எல்லாம் என் மனதில் இழையோடிக்கொண்டே இருக்க மனம் ஒரு நிலை படாமல் கண் இமைகள் லேசாக மூடிய நிலையில் இருந்தேன் .