மற்றப் பெண்களின் கையிலும் மடியிலும் குழந்தையைக் கண்டால் என் மடியிலும் குழந்தையைத் தா இறைவா! என வேண்டாத நாளில்லை. ஆண்டவன் அருள் செய்தான்.பிள்ளை பெற்றேன் அதனால் நான் மலடி என்று என்னை யாரும் சொல்ல மாட்டார்கள் என பெரு மூச்சு விட்டது அடங்கு முன் இறைவன் அக் குழந்தையை மரணமடையச் செய்து தன் பக்கம் அழைத்துக் கொண்டான். அந்த மகிழ்வு நீடிக்காமல் போனதே என ஏங்கினேன். இது எனக்கும் என் உட்றார் உறவினர்களுக்கும் மற்றும் அனைவர்க்கும் மிகவும் மன வருத்தத்தினை தந்தது .
எனது தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் பல இன்னல்களுக்கு உள்ளானேன்.
நான் மிகவும் சோர்ந்து மனமுடைந்து போனபோது ஒருவர் என்னிடம் வருந்தாதே 'அக் குழந்தை சுவனத்தில் இறைவனால் சேர்க்கப் பட்டு விட்டது. "குழிப் பிள்ளை மடியிலே" என்பது போல் இறைவன் உனக்கு தேவையானபடி உனது விருப்பம் போல் குழந்தைகள் கொடுப்பான்' என அன்புடன் ஆறுதல் சொன்னார். அந்த வார்த்தை என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
அல்லாஹ்வின் அருளால் எனக்கு மறுபடியும் நல்ல குழந்தைகள் கொடுத்து மகிழ்வாக வாழ வழி செய்துவிட்டான். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
ஆனால் இடைப்பட்ட காலங்களில் துயரத்தால் நான் இழந்த பல்வகை சிரமங்களும் நானே உருவாக்கிக் கொண்டவையே. நல்லதும் கெட்டதும் நடப்பது இயல்பு அதையே நாமே வரவைத்துக் கொள்வது நற்செயலாக இருக்க முடியாது. அனைத்தையும் சமநோக்கோடு எடுத்துக் கொள்ளும் மனது தேவை. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
