Monday 23 April 2018

தாவாவும் தப்லிக்கும் !


தாவா என்றால் அறிவித்தல் தப்லிக் என்பது பரப்புதல் அதாவது இஸ்லாமிய வழிபடும் முறைகளும் மற்றும் அதன் கொள்கைகளையும் மக்களுக்கு ஏற்றி வைத்தல் என்பதாகும் . இதனை கையாளும் முறைப்பற்றி முஸ்லிம்களிடையே பல கருத்து வேறுபாடு உள்ளது . அதனைப் பற்றிய விவாதங்களில் ஈடுபட விரும்பவில்லை .இங்கு தெரிந்த சில விளக்கம் தர விருப்பம். ஆண்டவன்தான் அதன் உண்மைநிலையை அறிவான் .

“தாவத்”- என்றால் அழைப்புப் பணியைச் செய்தல் ஆகும் . தாவத் என்பது தாவுதலாகாது .அதாவது மத மாற்றத்திற்கு செயல் படுவதாக கருதுவது மடமை, இஸ்லாம் சொல்லியபடி இறைவனை தொழும் மற்றும் அதன் நற்காரியங்களில் மற்றவர்களையும் ஈடுபட தங்கள் வசம் அவர்களயும் இணைந்துக் கொள்ளும்படி மக்களை மார்க்க வழியில்அழைப்பதுதான். இந்த தாவாவின் சிறப்பாகும் .இது நபிமார்களும் அவர்களது தோழர்களும் மற்றும் அவர்கள் வழி வந்தவர்களும் செய்த சேவையாக கருதப்படுகின்றது . முஸ்லிம் மக்களில் சிலர் இந்த தாவத் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர் , அவர்களில் மிகவும் படித்தவர்களும்,செல்வந்தர்களும் அடங்குவர் .

இவர்கள் நல்லவர் கெட்டவர் என யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை .நோக்கம் அனைவரும் இஸ்லாம் காட்டிய வழிகாட்டுதலைப் பேணி நடக்க வேண்டும் என்பதே. தொழுகையை கடைபிடித்துக் கொள்ளுங்கள் அதுவும் முடிந்தவரை பள்ளிவாசலுக்கு வந்து தொழுங்கள் அவ்விதம் நீங்கள் செய்தால் உங்களிடமுள்ள அனைத்து கெட்ட பழக்கங்களும் உங்களை விட்டு நீங்கி விடும் என்ற உயர்ந்த சிந்தனையோடு தப்லிக் ஜமாத்தினர் செயல்படுகின்றனர் . குடிப் பழக்கம் உள்ளவரையும் அவர்கள் அழைக்கத் தவறுவதில்லை . குடியை வெறுத்தாலும் அவர்கள் குடிகாரனை வெறுப்பதில்லை .அவரும் நல்வழிப் பட வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை . தாவாவில் சில நாட்கள் அது ஒரு நாளோ ,ஒரு வாரமோ அல்லது நாற்பது நாட்களோ பள்ளிவாசலில் அவர்களுடன் இருந்து அந்த சேவையில் ஈடுபடும் போது அது அவர்களுக்கு தங்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைவதுடன் முறையான இஸ்லாமிய வாழ்வின் முறையில் அவர்களை ஈடுபடுத்திக் கொள்வதுடன் மற்றும் அனைவருக்கும் அதனால் நன்மை வந்தடையும் என்ற ஆழமான நம்பிக்கை . இப்போதுள்ள மார்க்க போதகர்கள் , பள்ளிவாசல் இமாம்கள் பள்ளிவாசலில் இஸ்லாமிய கருத்துக்களை சொல்வதோடு நிறுத்தி விடுவார்கள்.அதோடு தங்கள் வேலை முடிந்து விட்டதாக கருதுகின்றனர் . அவர்களது தொண்டு பள்ளிவாசலுக்கு வெளியே இருப்பதில்லை .ஆனால் இந்த தாவா சேவையில் (தொழ அழைப்பது ) பள்ளிவாசலுக்கு வெளியேயும் செய்பவர்கள் பலர் . இவர்கள் 'தப்லிக் ' 'தாவா'சேவை செய்பவர்கள் என அழைக்கப் படுகின்றனர் இது மிக்க நல்ல சேவைதான் . வரவேற்கப்பட வேண்டியதுதான் .
ஆனால் அவர்கள் தொடர்ந்து தொழுதுவருபவர்களையும் ,இறைநேச பக்தியுடையவர்களையும் திரும்ப ,திரும்ப அழைப்பதும் ,அவர்களின் நேரத்தினை தேவையில்லாமல் எடுத்துக் கொள்வதும் இவர்கள் கருத்துக்கு உடன் பட்டு அவர்களை இக்கட்டான நிலைக்கு உட்படுத்தப்படுவதும்தான் சிறிது நெருடலை உண்டாக்கி விடுகின்றது. அவர்கள் தொழுகை முடிந்து அவசரமாக தங்கள் வேலையில் ஈடுபட முற்படும்போது அவர்களை தடுத்து நிறுத்தி பேச முற்படும்போது கேட்பவர் தடுமாற்றத்திற்கு ஆளாகும் நிலையை அறிந்துக் கொள்ளாமல் இருப்பது நற்பயனை அளிக்காது .
அவர்களது சேவை உயர்வானது நன்மைகளை அள்ளித் தருவது .அல்லாஹ் அவர்களுக்கு உதவியாளனாக இருப்பான் .ஆமீன்

No comments:

Post a Comment